சரண்டர் செய்யாத 30 துப்பாக்கிகள்- எஸ்பி., முக்கிய உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை இதுவரை சரண்டர் செய்யாதவர்கள் உடனே சரண்டர் செய்ய வேண்டுமென என எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவுப்படி காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 536 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர், அவர்களில் 441 பேர் தங்களது துப்பாக்கிகளை காவல்நிலையங்களில் சரண்டர் செய்துள்ளனர். இதில் 65 பேர் அரசாங்கத்தால் விதி விலக்கு பெற்றவர்கள். மீதம் உள்ள சரண்டர் செய்யாத 30 துப்பாக்கிகளையும் சரண்டர் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது, வாக்களிக்க கையூட்டாக பணமாகவோ, பொருளாகவோ பெற்றாலோ, கொடுத்தாலோ சட்டப்படி குற்றமாகும். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அச்சமின்றி நேர்மையான முறையில் அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.