/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 95 செல்போன்கள் மீட்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 95 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 95 செல்போன்கள் மீட்பு
X

தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்கப்பட்ட செல்போன்களை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் சுதாகர், அச்சுதன் மற்றும் போலீஸார் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

அதன்படி, சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். மாவட்டத்தில் இதுவரை 680 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.


அதன்தொடர்ச்சியாக, சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து துரிதமாக செயல்பட்டு தற்போது 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 95 செல்போன்களை கண்டு பிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஒப்படைத்தார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசியதாவது:

செல்போன்களை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக கையாள வேண்டும், பள்ளி குழந்தைகளுக்கு செல்போனில் ஆன்லைன் வகுப்பு பயிலும் போது அவற்றை கட்டுப்பாடுடன் கையாள்வதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும், மேலும், குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனுக்கு போன் லாக் தேவையில்லை.

குழந்தைகளுக்கு பெற்றோருக்கு தெரியாமல் ரகசியங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. அது பெற்றோர்கள் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும். செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அதற்கு அடிமையாகி பணத்தை இழந்து தங்கள் வாழ்க்கையை தொலைத்து தற்போது தற்கொலை செய்வது வரை நிகழ்ந்து உள்ளது. எனவே, குழந்தைகள் ஆன்லைன் ரம்மி விளையாடாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

முகம் தெரியாத நபர்களிடம் பழகி பின்னர் குற்ற நிழ்வுகள் நடக்க வழிவகை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தங்கள் செல்போனுக்கு வரும் OTP-யை கொடுக்க வேண்டாம். வங்கி ஒருபோதும் உங்கள் OTP-யை கேட்காது.

உங்களுக்கு வரும் OTP-யை யாரிடமும் பகிராதீர்கள். அதன் மூலம் உங்கள் பணம் ஏமாற்றப்பட்டு மோசடி நடைபெறும், சமூக வலைதளங்களில் வரும் வேலை வாய்ப்பு சம்மந்தமான செய்திகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இதுபோன்ற விழிப்புணர்வு குறும்படங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

மேலும் 'மாற்றத்தை தேடி" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் காவல்துறையினர் பொதுமக்களிடையே நேரடியாக சென்று கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, ஆன்லைன் மோசடி போன்ற பல்வேறு விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

எனவே, பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு இதுபோன்ற குற்ற நிகழ்வுகளில் இருந்து தற்காத்து கொண்டு தங்கள் பணத்தை பாதுகாத்து, பாதுகாப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கேட்டுக் கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 79 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 775 காணாமல் போன் செல்போன்களை தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடித்த சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியின்போது, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் சுதாகர், அச்சுதன் உட்பட சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 2 Feb 2023 12:00 PM GMT

Related News