ரம்ஜானை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு தொழுகை
ரம்ஜான் ஈகை பெருநாளை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
HIGHLIGHTS
ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.
நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.புனித ரமலான் மாதமான நேற்றுடன் நோன்பு முடிவடைந்த நிலையில் ரம்ஜான் ஈகைப் பெருநாள் கொண்டாடப்பட்டது. கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக சிறப்பு தொழுகை நடத்த அனுமதி வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
அதன்படி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கும்பகோணம் சாந்தி நகர் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நகர பொருளாளர் ஹாஜா மைதீன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் புத்தாடைகள் அணிந்து பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்று இஸ்லாமியர்கள், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.