கொலை செய்துவிட்டு தலைமறைவான அரசு பேருந்து ஓட்டுநர் தஞ்சை கோர்ட்டில் சரண்
முன்விரோதத்தில் செங்கல் சூளை நடத்தி வந்தவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் தஞ்சை கோர்ட்டில் சரண்
HIGHLIGHTS
கபிஸ்தலம் அருகே பட்டுக்குடி மெயின்ரோட்டில் வசிப்பவர் பிச்சைபிள்ளை (65). இவருக்கு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் பட்டுகுடி கிராமத்திலேயே செங்கல்சூளை நடத்தி வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் ரமேஷ் (42) என்பவருக்கும் இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 20ந் தேதி மாலை செங்கல் சூளைக்கு சென்ற ரமேஷ், பிச்சை பிள்ளையிடம் தகராறு செய்துள்ளார் .வாக்குவாதம் முற்றியதில் ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிச்சைபிள்ளையை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டார்.
படுகாயமடைந்த பிச்சை பிள்ளை அய்யம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து பாபநாசம் டிஎஸ்பி பூரணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தலைமறைவான ரமேசை போலீசார் தேடி வந்தநிலையில் ரமேஷ் தஞ்சை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ரமேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.