தஞ்சையில் 3 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தி தயாரிக்கும் நிலையம்
தஞ்சையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் 3 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தி தயாரிக்கும் நிலையம் அமைக்கப்படுகிறது.
HIGHLIGHTS
சூரிய தகடு மற்றும் அதற்கான 'சார்ஜ் கண்ட்ரோலர்' என்ற எந்திரம் ஆகிய இரண்டையும் மட்டும் வாங்கி வீடுகளில் மாட்டினால் நமது மின்தேவையில் ஒரு பகுதியை சூரிய ஒளியின் மூலம் தயாரித்துக் கொள்ள முடியும். இன்றைக்கு சில பெரிய வணிக நிறுவனங்கள், வீடுகளில் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டு அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்கும் சூரிய மின்சாரத்தை பயன்படுத்த விவசாயிகள் தொடங்கி விட்டனர்.
மின்சார வாரியத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்படும்போது சில நேரங்களில் தடை ஏற்படுகிறது. இதனால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழ்நிலை ஏற்படும். இதை தவிர்க்க விவசாயிகள் பலர் சூரியத் தகடுகளை பொருத்தி, சூரிய ஒளி மற்றும் வெப்பத்தின் மூலம் மின்சாரத்தை தயாரித்து அதை பயன்படுத்தி மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
அதேபோல் பல அரசு அலுவலகங்களிலும் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் தஞ்சை மாநகராட்சிக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு தஞ்சை மாநகரில் செயல்படுத்தப்பட்டு வரும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி செலவினங்களை குறைக்கவும், சூரிய ஒளி மின்சக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் 3 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிலையம் ரூ.17 கோடியே 79 லட்சம் மதிப்பில் அமைக்கப்படுகிறது.
தஞ்சை பழைய மாரியம்மன்கோவில் சாலையில் சமுத்திரம் ஏரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த நிலையத்தின் வளாகத்தில் தான் சூரியத் தகடுகள் பொருத்தப்பட்டு, சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
மேலும் மின்சார இணைப்பு கொடுப்பதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மாநகராட்சி மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன் கூறும்போது, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 3 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இவை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்ததாக 2.5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிலையம் ரூ.14 கோடியே 39 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளது. மாநகராட்சி செலவினங்களை குறைக்கும் வகையிலும், சூரிய ஒளி மின் சக்தியை ஊக்குவிக்கும் வகையிலும் இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது என்றார்.