அரசு பேருந்து லிட்டருக்கு 5.83 கி.மீ தொலைவுக்கு இயக்கம்:பணியாளர்களுக்கு பாராட்டு
டீசல் சிக்கனத்தில் அதிக செயல்திறன் புரிந்த ஓட்டுநர்கள், அதிக வருவாய் ஈட்டிய நடத்துநர்கள் என 455 பேருக்குபரிசு வழங்கப்பட்டது
HIGHLIGHTS
அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை லிட்டருக்கு 5.83 கிலோ மீட்டர் தூரம் இயக்கிய பணியாளர்களு சாதனை புரிந்த பணியாளர்களுக்கு பரிசளித்து பாராட்டு சான்றளிக்கப்பட்டது.
அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை ஒரு லிட்டருக்கு 5.83 கிலோ மீட்டர் தூரம் இயக்கி சாதனை புரிந்துள்ளனர் என அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் தெரிவித்தார்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று கும்பகோணம் தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, பாதுகாவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
பின்னர், மேலாண் இயக்குந ராஜ்மோகன் பணியாளர்கள் மத்தியில் பேசுகையில், நாம் கொரோனாவிலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தாலும், முழுவதுமாக மீண்டு வந்து விடவில்லை என்பதை கருத்தில் கொண்டு அனைத்துப் பணியாளர்களும் சமூக இடைவெளியோடும், முகக்கவசம் அணிந்தும், பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் பணியாற்ற வேண்டும் .
அனைத்து தரப்பு பணியாளர்களின் அயராத உழைப்பு மற்றும் பங்களிப்பின் காரணமாக, இப்போக்குவரத்துக் கழகம் டீசல் செயல் திறனில் ஒரு லிட்டருக்கு 5.83 கிலோ மீட்டர் தூரம் இயக்கியும், டயர் உழைப்பு திறனில் 3.26 லட்சம் கி.மீட்டர் என்ற அளவில் இயக்கி சாதனை புரிந்துள்ளது பாராட்டதக்கது.
எனவே, டீசல் சிக்கனத்தில் அதிக செயல்திறன் புரிந்த ஓட்டுநர்கள், அதிக வருவாய் ஈட்டிய நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், போக்குவரத்து மேற்பார்வையாளர்கள், ஓட்டுநர் பயிற்சியாளர், பாதுகாவலர்கள், அலுவலக பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பொறியாளர்கள், கிளை மேலாளர்கள் என 455 பேருக்கு பாராட்டி பரிசுகள் வழங்கப்படுகிறது என்றார். நிகழ்ச்சியில் போக்குவரத்துக் கழக பணியாளர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.