நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து கடையடைப்பு போராட்டம்
பாவூர்சத்திரம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து கடையடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் சர்வீஸ் சாலை அமைக்க கோரி 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை- கொல்லம் இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற 254.13 கோடி ரூபாயில் சித்த மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டது. இதில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணியை நடைபெறும் வரும் நிலையில் அதன் அருகே சர்வீஸ் சாலை அமைக்க கோரி வணிகர்கள் சங்க பெருந்தலைவர் காமராஜர் தினசரி காய்கனி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து அமைப்புகள் இணைந்து 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைத்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
தென்காசி நெல்லை நான்கு வழி சாலை பணிக்காக பாவூர்சத்திரத்தில் புதிதாக அமைக்கப்படும் ரயில்வே மேம்பாலத்தில் இரு பகுதிகளிலும் போர்கால அடிப்படையில் சர்வீஸ் சாலை அமைத்து தரவேண்டும். பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் சாலை பணிகளை விரைந்து முடித்து தரவேண்டும். இதுவரை துவங்கப்படாத ரயில்வே சுரங்கப்பாதை சப்வே பணிகளை விரைந்து துவங்க வேண்டும். அனைத்து கடைகளுக்கு முன்பாக தோண்டப்பட்டு இருக்கும் குண்டு குழிகளை சீர்படுத்தி தென்காசி ஆசாத் நகர் புறவழிச் சாலை பணிகளை விரைந்து துவங்க வேண்டும். மாயாண்டி பகுதியில் அமையவிருக்கும் சுங்கச்சாவடி பணிகளை உடனே நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வணிகர் சங்கத் தலைவர் விக்ரம ராஜாவை அழைத்து மாவட்டம் முழுவதும் கடை அடைப்பு செய்து மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள் தெரிவித்தனர்.