கேரளாவிற்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல எதிர்ப்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கேரளாவிற்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து பாவூர்சத்திரத்தில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
HIGHLIGHTS
தமிழகத்தில் இருந்து, கேரளாவிற்கு கனிம வளங்களை கொண்டு செல்ல வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய கோரி பாவூர்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து தினமும் கேரளாவிற்கு மணல், ஜல்லி கற்கள், குண்டு கற்கள், எம் சாண்ட் போன்ற கனிம வளங்கள் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.
அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதால் தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கனிம வளம் கொண்டு செல்லும் லாரிகளால் போக்குவரத்து நெருக்கடி, சாலைகள் சேதம், பல விபத்துகளும் ஏற்படுகிறது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்ற னர். இந்நிலையில் இன்று கனிம வள கொள்ளையை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு சமூக பாதுகாப்பு இயக்கங்கள் சார்பில் கனிமவள கொள்ளையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து, கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்ப பெறக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் எம் பி சுப்பிரமணியம், கீழப்பாவூர் வட்டார செயலாளர் சிங்கக்குட்டி, மதிமுக உதயசூரியன் உட்பட திரளான பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்