குற்றாலநாதர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா தேரோட்டம்
குற்றாலநாதர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.
HIGHLIGHTS
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று குற்றாலம். இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் சீசன் அருமையாக இருக்கும். இந்த காலநிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்து செல்வது வழக்கம். அதேபோல் ஆன்மீக சுற்றுலாவுக்கும் சிறந்த இடம் குற்றாலமாகும். இங்கு புகழ்பெற்ற இந்து கோவில்கள் பல உள்ளன. அதுவும் ஐயப்பன் சீசன் காலத்தில் அனைத்து அய்யப்ப பக்தர்களும் குற்றாலம் அருவில் குளித்து விட்டு குற்றாலநாதரை தரிசித்து விட்டு செல்வது வழக்கம்.
பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபை தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ளது. இங்கு குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்மை காட்சி தருகின்றனர். இந்த திருக்கோவிலானது சங்கு வடிவில் காட்சி இருக்கிறது.வைணவ தலமாக இருந்த இந்த தலம் சைவ தலமாக அகஸ்திய முனிவர் மாற்றியுள்ளார். முன்னொரு காலத்தில் அகஸ்தியர் கோவிலுக்கு வழிபட வந்த பொழுது அவரை வழிபட அனுமதிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அருகே உள்ள இலஞ்சி குமாருக்கு கோவிலில் தங்கி மறுநாள் மாறுவேடமிட்டு குற்றாலம் கோவிலுக்கு சென்று பெருமாள் சிலையை சிவலிங்கமாக மாற்றியதாக தல வரலாறு கூறுகிறது.
தற்போது வரை லிங்கத்தின் மீது கை வைத்து அழுத்திய தடம் உள்ளது.மேலும் அருவிக்கு அருகே கோயில் அமைந்திருப்பதாலும், அகஸ்தியர் தலையில் கையை வைத்து அழுத்தியதற்காகவும், மூலவருக்கு ஜலதோஷம் மற்றும் தலைவலி ஏற்படாமல் இருக்க கசாயம் காய்ச்சும் வைபமும் இங்கு நடைபெறும். அதேபோல் இந்தக் கோவிலில் பராசக்தி பீடம் அமைந்துள்ளது. மூலிகளால் ஆன மூலவருக்கு தனியாக சித்திரை சபை அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே தெப்பக்குளமும் அமைந்துள்ளது. கோவில் நடைபெறும் அனைத்து விழாக்களும் சித்திர சபை ரத வீதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நடைபெறும்.
இவ்வாறு பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த திருக்கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஐப்பசி விசு திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான நான்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. விநாயகர், முருகன், குற்றாலநாதர், குழல் வாய்மொழி அம்மை, ஆகிய நான்கு தேர்களை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிவ சிவ என்ற கோசத்தோடு வடம் பிடித்து இழுத்தனர். அப்போது அங்கு பக்தி பரவசமாக இருந்தது.
இந்த தேர்திருவிழாவின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வருகின்ற 15-ம் தேதி நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாரதனையும், பதினாறாம் தேதி மூலிகை ஓவியங்களான சித்திர சபையில் உள்ள நடராஜருக்கு தாண்டவ தீபாராதனையும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.