கடையம் ராமநதி அணைக்கு கீழ் மீன் பண்ணை: அடிக்கல் நாட்டிய மாவட்ட ஆட்சியர்
கடையம் ராமநதி அணைக்கு கீழ் மீன் பண்ணை திட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அடிக்கல் நாட்டி வைத்தார்
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் கடையம் ராமநதி அணையின் கீழ் பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் நன்னீர் சினை மீன் பண்ணைக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். அப்போது கடையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் ஆட்சியரிடம் கடையம் தாலுகாவாக அறிவிப்பது குறித்தும், கடையம் சுற்றுவட்டார பகுதிகள் நெல்லை மாவட்டத்தோடு இணைய இருப்பதாக வரும் தகவல் குறித்தும் கேட்டனர். அதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கடையம், ஆழ்வார்குறிச்சி பிர்கா திருநெல்வேலி மாவட்டத்துடன் சேர்க்கப்பட மாட்டாது. அப்படி ஏதும் தகவல் இல்லை. மேலும் விரைவில் கடையம் தாலுகாவாக அறிவிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராமநதி, கடனாநதி அடிவாரப் பகுதிகளில் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார். உடன் தென்காசி திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், மீன்வள அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு 100 லட்சம் நுண்மீன் குஞ்சுகள் மற்றும் 20 லட்சம் தரமான சினை மீன் குஞ்சு விரலிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மீன் குஞ்சு உற்பத்தி பண்ணைகளுக்கு விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.