நடந்து சென்று பெண் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா வீதி வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் பூங்கோதை ஆலடி அருணா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூலாங்குளம் தெற்கு, பூலாங்குளம் வடக்கு, செல்லதாயார் புரம், மேலகிருஷ்ணபேரி, கரிசலூர், பொட்டலூர், மகிழ்வண்ணநாதபுரம், பெத்த நாடார் பட்டி, வடக்கு சிவகாமி புரம், அருணாப்பேரி, நாகல் குளம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் வாக்கு சேகரித்தார். வீதி வீதியாக நடந்தே சென்ற டாக்டர்.பூங்கோதை ஆலடி அருணாவிற்கு, பொதுமக்கள் வெடி வெடித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பூங்கோதை ஆலடிஅருணா பொதுமக்களிடையே பேசுகையில் : மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு நல்ல திட்டங்களை தேர்தல் அறிக்கையாக தந்துள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய், கொரோனா நிதியாக குடும்பத்திற்கு 4 ஆயிரம் ரூபாய், அரசு பணிகளில் பெண்களுக்கு 40 சதவீத வாய்ப்பு என பல நல்ல திட்டங்களை வகுத்துள்ளார். கடந்த 10 வருடங்களாக தமிழகத்தில் பேய் ஆட்சி நடந்துள்ளது. மாநில சுயாட்சியை அடகு வைத்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும். அதற்காக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.