சாலை நடுவே கட்டிலை விரித்து அமர்ந்த முதியவர்
சிவகங்கையில் சாலையின் நடுவே கட்டிலை விரித்து அமர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மதுரை சாலையில் உள்ள சர்ச்சின் எதிர்புறம் உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் தேனப்பன், சிலோன்மணி தம்பதியர். முன்னதாக பெரும் வசதி வாய்ப்போடு இருந்தவர் தற்சமயம் இவரிடம் பணம் வாங்கியவர்களால் ஏமாற்றப்பட்ட நிலையில் தேனப்பன் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தனிமையில் இருந்து வரும் தேனப்பன் தானாக பேசிக்கொண்டு சாலைகளில் சுற்றித்திரியும் நிலையில் இன்று போக்குவரத்து அதிகமாக உள்ள மதுரை முக்கு பகுதியில் சாலையின் மத்தியில் தான் எடுத்து வந்த கட்டிலை விரித்து அதில் அமர்ந்து கொண்டு தானாக பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் சென்ற சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவலர்கள் அவரிடம் பேசி சமாதானப்படுத்தி அவரை அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து அவர் தனது கட்டிலை மடக்கி தனது தலையில் சுமந்து கொண்டு புறப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.