ஆற்காடு: கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் ராணுவவீரர் மீது பெண் புகார்
ஆற்காடு அருகே, பணத்தை ஏமாற்றி,கொலை மிரட்டல் விடுத்ததாக, முன்னாள் ராணுவ வீரர் மீது, எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அலமேலு (45), கணவரை இழந்தவர். சரஸ்வதி (18) என்ற மகளும், பிரபு (௧௬) என்ற மகனும் உள்ளனர்.சரஸ்வதியின் மேல்படிப்புக்காக தொண்டான்துளசி பகுதியை சேர்ந்த முன்னாள் இராணுவீரர் பத்மநாபன்( 40) என்பவரை அணுகி தனது மகளை, மருத்துவருக்குப்படிக்க மருத்துவக்கல்லூரி ஒன்றில் சீட் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார்.
தனக்கு தெரிந்த நபர் மூலமாக, காஞ்சிபுரம் அருகே உள்ள பிரபல மருத்துவக்கல்லூரியில் 35 லட்சத்திற்கு சீட் கேட்டு ஏற்பாடு செய்வதாக கூறி, பத்மநாபன் முன்பணமாக அலமேலுவிடம் இருந்து, ஐந்து லட்சம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்கு மேலாகியும், சொன்னபடி, மருத்துவ சீட்டை சரஸ்வதிக்கு வாங்கித் தராமல் அலமேலுவை பத்மநாபன் குடும்பத்தினர் சாக்கு போக்கு சொல்லியுள்ளனர்.
கடைசியாக, பத்மநாபனிடம் மருத்துவ சீட் வேண்டாம் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு, அலமேலு கேட்டுள்ளார். ஒன்றரை லட்சத்தை மட்டும் தந்து விட்டு மீதமுள்ள நான்கு லட்சத்தை, பத்மநாபன் தரவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன், தகாத வார்த்தைகளால் அலமேலுவை பத்மநாபன் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாவும் தெரிகிறது.
இது குறித்து, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யனிடம், அலமேலு புகார் மனு அளித்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்த பத்மநாபன் மீது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏமாற்றிய பணத்தை மீட்டு தர வேண்டும் என்று மனுவில் அவர், கோரிக்கை வைத்துள்ளார்.