ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களை சுத்தம் செய்ய கோரி விவசாயிகள் கோரிக்கை
பாணாவரம் அருகிலுள்ள கிராமங்களின் ஏரிகளில் நீர்வரத்து கால்வாய்களை சுத்தம் செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
HIGHLIGHTS
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணவரம் அருகே சுமார் 20க்குமேற்பட்ட கிராம மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும் . அவற்றில் பிபி மோட்டூர், ஆயத்தாங்கள், நாகத்தாங்கள், பழைய பாளையம், குன்னத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு நீரவரத்திற்காக ஆற்று கால்வாய் அமைக்கப்பட்டு, அதன் மூலம் வரக்கூடிய நீரினை ஏரிகளில் சேமித்து வைத்து பாசனம் செய்து வருகின்றனர்.
தற்போது ஆற்றுக்கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்படாமல் ஏரிகளுக்கு வரக்கூடிய நீர் ஆங்காங்கே தடைபட்டு நீர்வரத்து குறைந்து விடுகிறது. இதனால், ஏரியில் விவசாய பாசனத்திற்கு முறையான நீர் இன்றி விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி விவசாயம் செய்ய முடியாமல் தவித்தும் நஷ்மடைந்தும் வருகின்றனர்.
மேலும், இது குறித்து விவசாயிகள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனுவினை அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அப்பகுதி விவசாயிகள் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்திலும் இரு முறை மனுக்களை வழங்கி உள்ளனர்
இந்நிலையில், தமிழக அரசு உடனடியாக இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி விவசாயிகள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் மனுவினை வழங்கியுள்ளனர்.