அரக்கோணம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்து
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டது.
சென்னை ஆவடி ரயில் நிலையத்திலிருந்து தண்டவாளங்களுக்கு இடையே ஜல்லி கற்களை கொட்டி செல்லும் சரக்கு ரயில் முப்பது பெட்டிகளுடன் கிளம்பியது. அம்பத்தூர் ஆவடி ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த சில தினங்களாக தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தண்டவாளங்களுக்கு இடையே ஜல்லிக் கற்களை கொட்டி கொண்டு வந்த சரக்கு ரயில் அரக்கோணம் ரயில் நிலைய சரக்கு ரயில் பராமரிப்பு பகுதிக்கு வரும் பொழுது ரயில் இன்ஜினில் இருந்து 3 மற்றும் 4வது பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி தடம் புரண்டது.
பலத்த சத்தம் கேட்டவுடன் ரயில் என்ஜின் டிரைவர் உடனடியாக சரக்கு ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சரக்கு ரயில் தடம் புரண்டது குறித்து தகவலறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய பெட்டியை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் சென்னையிலிருந்து அரக்கோணம் வரும் ரயில்கள் மற்றும் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.