காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை மாற்ற காேரி ஆட்சியர் அலுவலம் முற்றுகை
காவேரி, வைகை, குண்டாறு திட்டத்தை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
HIGHLIGHTS
காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தினால் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படுவதாக கூறி பாலன்நகர் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் தரையில் விழுந்து அழுது புலம்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்ட விவசாயிகளின் கனவுத் திட்டமான காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. விராலிமலை தொகுதிக்குட்பட்ட குன்னத்தூர் பகுதியில் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் வழித்தடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணியில் நிலம் அளவீடு செய்யும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை பாலன் பகுதியில் திட்ட அதிகாரிகள் நேற்று அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் ஈடுபட்டபோது அந்த பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகள் கையகப்படுத்துவதற்கான அளவீடுகளை செய்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தோடு பெண்கள் தரையில் விழுந்து புரண்டு அழுது போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து போலீசார் அவரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.