9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை : புதுக்கோட்டையில் இன்று தொடக்கம்
9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை இன்று முதல் புதுக்கோட்டையில் தொடங்கியது.
HIGHLIGHTS
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு ராணியார் மகளிர் மேனிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் தமிழரசியின் வழிகாட்டுதலில் பிளஸ்1 வகுப்புகளுக்கு மாணவிகள் சேர்க்கை நடைபெற்றது.
இது குறித்து தலைமையாசிரியர் தமிழரசி கூறியதாவது: பள்ளியில் மொத்தம் 16 பாடப்பிரிவுகள் உள்ளன. அதில், ஆங்கில வழியில் 8 பிரிவுகளும், தமிழ் வழியில் 8 பிரிவுகளும் அடங்கும். இதில் ஆங்கில வழியில் 5 பிரிவுகளும் தமிழ் வழியில் 8 பிரிவுகள் தொழில் கல்வியில் 3 பிரிவுகள் உள்பட மொத்தம் 16 பிரிவுகளில் மாணவிகள் விருப்பப்படி சேர்க்கை நடைபெறுகிறது.
பெற்றோர்களுடன் மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளியில் சேர்வதற்கு வருகின்றனர். குறைந்த மதிப்பெண் பெற்றவர்களையும் அவர்கள் விரும்பும் பிரிவுகளில் சேர்க்கும் வகையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழுவினரின் வழிகாட்டுதலின்படி தற்பொழுது சேர்க்கைகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் பள்ளிக்கு வரும் மாணவிகள் அனைவருக்கும் கிருமிநாசினி மருந்துகள் வழங்கியும், தனிமனித இடைவெளியை கடைபிடித்து முகக் கவசம் அணிவித்தும் வருவதற்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.