குடிநீர் இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
குடிநீர் இணைப்பை துண்டித்த ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா.
HIGHLIGHTS
அழகம்பாள்புரத்தில் வசித்து வரும் சில குடும்பங்களின் குடிநீர் இணைப்பை துண்டித்த ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கைக்குறிச்சி ஊராட்சியில் உள்ள அழகம்பாள்புரத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் அழகம்பாள்புரத்தில் வசிக்கும் சில குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் திமுகவிற்கு வாக்களிக்காமல் வேறு கட்சிக்கு வாக்களித்து உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கைக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் நடந்து முடிந்த தேர்தல்களில் திமுகவுக்கு வாக்களிக்காமல் வேறு கட்சிக்கு வாக்களித்த 7 குடும்பங்களின் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் திருவரங்குளம் ஒன்றிய ஆணையர் வட்டார வளர்ச்சி அலுவலர் என பலரிடமும் பல மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் இன்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து குடிநீர் இணைப்பை துண்டித்த ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த திருக்கோகர்ணம் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் பிரச்சினை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு மீண்டும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளிக்க போலீசார் அவர்களை அழைத்து சென்றனர்.
பின்னர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக கைகுறிச்சி ஊராட்சி அழகம்பாள் புரத்தில் வசிக்கும் 7 குடும்பங்களுக்கு மட்டும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் நாங்கள் நடந்து முடிந்துள்ள தேர்தல்களில் திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக கைகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் ரெங்கநாயகி மற்றும் அவரது கணவர் சுப செல்வம் மற்றும் பிரதிநிதிகள் எங்களுக்கு வரும் குடிநீர் இணைப்புகளை துண்டித்து உள்ளனர்.
இது குறித்து நாங்கள் மாவட்ட ஆட்சியர் திருவரங்குளம் ஒன்றிய ஆணையர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் தீக்குளித்து இறப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.