நவ.11 -ல் புதுக்கோட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
Employment News in Tamil -மாவட்ட வேலை வாய்ப்பு , தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது
HIGHLIGHTS
Employment News in Tamil -மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 11.11.2022 அன்று நடைபெற உள்ளது.
இரண்டாம் உலகப்போர் முடிவுற்றதைத் தொடர்ந்து படைக்கலைப்பினால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட போர் வீரர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கத்தோடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களின் சேவைகள் 1948- ஆம் ஆண்டிலிருந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
1954 – இல் சிவராவ் குழு அறிக்கையில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய தொழில் ஆராய்வு, தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலை நிலவரத் தகவல் ஆகிய பணிகள் வேலைவாய்ப்புத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜூன் 9, 2014 அன்று இந்திய குடியரசுத் தலைவர் தமது பாராளுமன்ற உரையில், எனது அரசு வேலைவாய்ப்பு அலுவலகங் களை தொழில் நெறி வழிகாட்டும் மையங்களாக மாற்றம் செய்து, நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை வெளிப்படைத் தன்மையுடன் கூடிய பயனுள்ள முறையில் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழியாக வழங்கும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, 30.07.2019–இல் வெளியிட்ட அரசாணையின்படி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களானது மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களாக மாற்றம் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 11.11.2022 (வெள்ளிக்கிழமை) அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது.
இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலை நாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி இளைஞர்களும் தங்களது சுய விவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச் சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் "தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2