புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர் முகாம்: ஆட்சியரிடம் 366 பேர் மனு
முதியோர்உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் மனு அளித்தனர்
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, தலைமையில் இன்று (29.05.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 366 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.இம்மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், விபத்து மரணத்திற்கான நிதியுதவித் தொகை தலா ரூ.1,00,000 வீதம் 2 பயனாளிகளுக்கு ரூ.2,00,000 மற்றும் இயற்கை மரணம் நிதியுதவித் தொகை தலா ரூ.17,000 வீதம் 8 பயனாளிகளுக்கு ரூ.1,36,000 என ஆக மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூ.3,36,000 -க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மிஷன் வத்சால்யா திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதி ஆதரவு உதவித்தொகைக்கான ஆணையினை பயனாளிக்கு ,மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வழங்கினார்.
இக்கூட்டத்தில், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.