தோட்டக்கலைத் துறை திட்டங்களில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
தோட்டக்கலை மானியத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம்
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்ட தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: நடப்பு 2023-24 ஆம் நிதி ஆண்டில் தோட்டக்கலைத் துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், மாநிலத் தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய் பனை, தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்தத் திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலைத் துறையின் (https://tnhorticulture.tn.gov.in/tnhortnet) இணையதளத்தில் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் மானியங்கள் பெறலாம். பதிவு செய்வதில் சிரமம் இருப்பின் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்யலாம்.
பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் (https://tnhorticulture.tn.gov.in) இணையவழியில் பதிவு செய்ய வேண்டும். நிகழாண்டில் 98 கிராமங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட இக்கிராம ஊராட்சிகளுக்கு திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.