சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் வாய் தவறிய வார்த்தைகளால் திமுகவினர் அதிர்ச்சி
இது நிச்சயமாக கைதிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு புரட்சித் தலைவர் அரசு என்று வாய்தவறி வார்த்தைகள் வந்தது.
HIGHLIGHTS
புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியின் வாய் தவறிய வார்த்தைகளால் திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள குற்றவாளிகளுக்கு நோய்ப் வாய்ப்பட்டால் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதனை சட்டம் மற்றும் சிறை துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசியதாவது, சிறையில் உள்ள கைதிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது நோக்கத்திற்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறை வாசிகள் சிறப்பு சிகிச்சை பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக கைதிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு புரட்சித் தலைவர் அரசு என்று வாய்தவறி வார்த்தைகள் வந்தது. இதையடுத்து ஒரு சில வினாடிகள் தடுமாறி நின்ற பின்னர் சுதாரித்து, தமிழக முதல்வர் தளபதி அரசு விளங்குகிறது என்று பேசி சமாளித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த திமுகவினர், அமைச்சர் ரகுபதி ஏற்கெனவே அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர் என்பதால் பழைய பாசமா அல்லது வாய் தவறி வார்த்தைகள் வந்து விட்டதா என்று திமுகவினர் அதிர்ச்சியுடன் தங்களுக்குள்ளாகவே பேசியபடி அங்கிருந்து சென்றனர்.