ஒன்றிய குழு தலைவரை ராஜினாமா செய்ய அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
அதிமுக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது கட்சி மாறியுள்ள தலைவர், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுக்கூட்டத்தில், ஒன்றியக் குழு தலைவர் ராஜினாமா செய்யக் கோரி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு பரபரப்பு.
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் இன்று ஒன்றிய குழுத்தலைவர் சின்னையா தலைமையில் இன்று நடைபெற்றது.கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட அதிமுக கவுன்சிலர் அண்ணாதுரை, தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள, வாகன டீசல் செலவு, ஒன்றிய குழு கூட்ட அரங்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை அகற்றியது, அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய குழு தலைவர் சின்னையா கட்சி மாறியது போன்ற விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாகக்கூறி வெளி நடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், ஒன்றியக்குழு துணைத் தலைவர் மாதவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: புதுக்கோட்டை ஊராட்சிய ஒன்றிய குழு தலைவராக இருக்கும் சின்னையா, அதிமுக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் இவர் தற்போது கட்சி மாறியுள்ளதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கூட்டரங்கில் இருந்த எடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை கூட்டரங்கில் வைக்கவேண்டும். ஓடாத வாகனங்களுக்கு டீசல் போட்டதாக செலவு கணக்கு காண்பித்ததற்கு கண்டனம் தெரிவித்து, நாங்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம் என்றார்.