பெரம்பலூரில் குழந்தை திருமண தடுப்பு பிரச்சார கையெழுத்து இயக்கம் தொடக்கம்
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமண தடுப்பு பிரச்சார கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
HIGHLIGHTS
பெரம்பலூரில் சைல்டு லைன் அமைப்பு சார்பில் கடந்த 14ம்தேதி முதல் 19ம்தேதி வரை குழந்தைகள் உங்கள் நண்பன் வார விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ராக்கி கட்டுதல், கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக நான்காவது நாள் நிகழ்ச்சியாக குழந்தை திருமண தடுப்பு கையெழுத்து பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ச.மணி தலைமை வகித்து கையெழுத்திட்டு கையெழுத்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் கலந்து கொண்டு குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகத்தை தொடங்கிவைத்தார்.
இதை தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் கொடுத்து குழந்தை திருமண தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள், காவல்துறையினர், போக்குவரத்து துறையினர் மற்றும் மாணவிகள், பெண்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், இளைஞர்கள் ஆகியோர் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர்.