உதகை நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ஆஜர்: 3 நாள் காவல் விசாரணை
மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு.
HIGHLIGHTS
கடந்த 2016 ஆம் ஆண்டு, நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள நெடுகல்கம்பை பகுதியில் பொதுமக்களை மூளைச்சலவை செய்யும் விதமாகவும், அரசுக்கு எதிராக மக்களை சேர்த்து கூட்டம் கூட்டியதற்காகவும், மாவோயிஸ்ட் சாவித்திரி என்பவரை வயநாடு பகுதியில் கேரளா போலீசார் கைது செய்து, திருச்சூர் பகுதியில் உள்ள விய்யூர் சிறையில் அடைத்தனர்.
நெடுகல்கம்பை பகுதியில், அரசுக்கு எதிராக மக்களை சேர்த்து கூட்டம் கூட்டியது தொடர்பான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அவரிடம் விசாரணை செய்ய நீலகிரி மாவட்ட காவல்துறையினர், கேரளா காவல்துறையிடம் அனுமதி கோரி, விசாரணைக்காக மாவோயிஸ்ட் சாவித்திரியை துப்பாக்கி ஏந்திய போலீஸார் பலத்த பாதுகாப்புடன் கேரள மாநிலத்திலிருந்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி இல்லாததால் வழக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட மவோயிஸ்ட் சாவித்திரி கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாவோயிஸ்ட் சாவித்ரியை காவல்துறையினர் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், நேற்று ஆஜர்படுத்தினர். பின்னர் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி சஞ்சய் பாபா மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் அவரை அழைத்து சென்றனர்.