கொரொனாவால் முன்னதாக நடைபெற்ற தீமிதி திருவிழா
நாகப்பட்டினத்தில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக முன்னதாக நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த வாழ்மங்கலம் மழை மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி, பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, தமிழக அரசின் கொரொனா கட்டுப்பாடு காரணமாக குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக தீமிதி திருவிழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாகி அழகன் என்ற செளரிராஜன் செங்குந்தர் செய்திருந்தார்.