பாஜகவிற்கு 3 சின்னங்கள் - தொல் திருமாவளவன்
பாஜகவிற்கு 3 தேர்தல் சின்னங்கள் உள்ளது என, நாகப்பட்டினத்தில் தொல் திருமாவளவன் பேசினார்.
நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ஆளுர் ஷாநவாசை ஆதரித்து இன்று நாகையில் விசிக கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக திருமருகல் பகுதியில் விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஷை ஆதரித்தும், கீழ்வேளூர் தொகுதியில் நாகை மாலியை ஆதரித்தும் திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து அவுரி திடலில் நடைபெற்ற கூட்டத்தில் இயக்குனர் கரு.பழனியப்பன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அவுரி திடலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தொல் திருமாவளவன், தற்போது ஆட்சி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் பாஜகவை ஆதரிப்பது என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும், அதிமுக தொண்டர்களுக்கும் செய்யும் துரோகம் இல்லையா என அவர் கேள்வி எழுப்பினார்.
அதிமுக என்பது அதிகமாக இல்லை அது பாஜகவாக மாறிவிட்டது என விமர்சித்த தொல் திருமாவளவன், பாமக,பாஜகவின் பினாமி கட்சியாக மாறி விட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் பாஜக விற்கு தாமரை சின்னம் மட்டுமின்றி இரட்டை இலை சின்னம், மாம்பழம் சின்னம் உள்ளிட்ட 3 சின்னங்கள் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த தேர்தலில் இரட்டை இலைக்கும், மாம்பழத்திற்கும் ஓட்டு அளித்தால் அது பாஜகவிற்கு ஓட்டு அளித்ததாக அர்த்தம் என்று கூறிய தொல் திருமாவளவன், அதிமுக எம்எல்ஏ.,கள் பாஜக உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என கூறினார்.