கிருஷ்ணகிரியில் நாட்டு வெடிகுண்டை மிதித்த பெண் படுகாயம்: போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரியில் பன்றிக்கு வைத்த நாட்டு வெடிகுண்டை மிதித்த பெண் படுகாயம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரியில் தவறுதலாக நாட்டு வெடிகுண்டை மிதித்து படுகாயமடைந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, பழையபேட்டை அருகே பி கே ஜி நகரை சேர்ந்தவர் 55 வயதான ஜோதி. பாத்திரம் மற்றும் வளையல் வியாபாரம் செய்து வரும் இவர், பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் துணி துவைப்பதற்காக வீட்டிலிருந்து வெளியில் வந்த ஜோதி, வீட்டின் வாசலில் பந்து போன்று கிடந்த பொருளை காலால் மிதித்துள்ளார்.
அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் அந்த பொருள் வெடித்து சிதறியதில் ஜோதி காலிலுள்ள எலும்புகள் நொறுங்கி படுகாயமடைந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த ஜோதியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மர்மப் பொருள் வெடித்து ஜோதி படுகாயமடைந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நகர போலீசார் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று ஜோதிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் பன்றிகளை பிடிப்பதற்காக வைக்கக்கூடிய நாட்டு வெடிகுண்டை தவறுதலாக மிதித்ததில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
தொடர்ந்து பன்றிகளை பிடிப்பதற்காக வைக்கக்கூடிய நாட்டு வெடிகுண்டு இந்த பகுதிக்கு வந்தது எப்படி என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.