எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு: போராட்டம், கண்ணீர் புகை குண்டு வீச்சு
கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழாவிற்கு அனுமதி வழங்க கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்தனர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு பகுதிகளில் எருது விடும் விழா நடைபெற்றது. எருது விடும் விழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
இந்நிலையில், ஓசூர் அருகே கோபசந்திரம் புரத்தில் கோயில் திருவிழாவையொட்டி இன்று எருது விடும் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையொட்டி 100க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் ஏராளமான இளைஞர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் எருது விடும் விழாவிற்கு அனுமதி வாங்காததால், மாவட்ட நிர்வாகம் எருது விடும் விழாவிற்கு தடை விதித்தது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்களின் போராட்டத்தின் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் எருது விடும் விழாவிற்கு அனுமதி வழங்கினார்.
அனுமதி வழங்கப்பட்ட போதிலும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.
மேலும் போராட்டக்காரர்கள் அரசு பேருந்துகள், லாரிகள் உள்ளிட்டவற்றின் கண்ணாடிகளை உடைத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தினர், பதிலுக்கு போராட்டக்காரர்கள் கற்களை கொண்டு தாக்கினர். இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.