கரூர்: 25 ஆண்டு பழைய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை காலி செய்ய உத்தரவு
அசம்பாவிதங்களுக்கு வீட்டு வசதிவாரியம் பொறுப்பேற்காது என முன்னெச்சரிக் கையாக இந்த அறிவிப்பு கொடுக்கப் பட்டுள்ளது
HIGHLIGHTS
கரூரில் 25 ஆண்டு பழைய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் சேதமடைந்துள்ள காரணத்தால் உடனடியாக மாற்று இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என குடியிருப்புக்களில் துறை சார்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு. மாற்று இடத்திற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட கொளந்தானூர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக 1995-ம் ஆண்டு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் 112 வீடுகள் உள்ளன. 28 ஆண்டுகள் கடந்த நிலையில் குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த 32 வீடுகள் மிகவும் அதிகளவில் சேதமடைந்துள்ளதாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் குடியிருப்புகளில் எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் ஒன்றை இன்று கதவுகளில் ஒட்டியுள்ளனர்.
அதில் சேதமடைந்த வீடுகளுக்கு மாற்று ஏற்பாடு செய்துகொண்டு விரைவில் குடியிருப்புவாசிகள் வெளியேற வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களுக்கு, வீட்டு வசதிவாரியம் பொறுப்பேற்காது என முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக குடியிருப்புவாசிகள் தெரிவிக்கையில், 25 வருடங்களுக்கு மேலாக இங்கு வசித்து வருகிறோம். குடியிருப்புகள் அதிகளவில் சேதமடைந்துள்ளது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தோம். முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தற்போது திடீரென எங்களை மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டுமெனவும், மொத்தமாக காலி செய்ய வேண்டுமெனவும் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். திடீரென்று மாற்று இடத்தை எங்களால் தேர்வு செய்ய முடியாது. எனவே தமிழக அரசு பொறுப்பேற்று எங்களுக்கு மாற்று இடத்தை தேர்வு செய்து தர வேண்டும் எனவும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்வதாக கோரிக்கை வைத்தனர்.