கரூர் நகராட்சியில் வீடுவீடாக கபசுர குடிநீர் வழங்கல்
கரூரில் 48 வார்டுகளில் வசிக்கும் சுமார் 2 லட்சம் பொதுமக்களுக்கு வீடுகளுக்கே சென்று கபசுரக்குடிநீர் நகராட்சி சார்பில் வழங்கப்படுகிறது.
HIGHLIGHTS
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தமிழக அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அறிவித்து அமல் படுத்தப்பட்டுள்ளது.
கரூர் நகராட்சி நிர்வாகம் சார்பாக கொரோனா நோய்த்தொற்றின் வீரியத்தைக் குறைக்கவும், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் விதமாக கபசுரக் குடிநீர் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு சென்று பொதுமக்களுக்கு நேரிடையாக கொடுக்கப்படுகிறது.
இதன்படி, கரூர் நகராட்சியின் 48 வார்டுகளிலும் உள்ள 65,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வசிக்கக்கூடிய 2.50 இலட்சம் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் விதமாக தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கபசுரக்குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.
இதற்காக நகராட்சி பகுதியில் அமைந்துள்ள 5 திருமண மண்டபங்களில் கபசுரக்குடிநீர் தயார் செய்யப்படுகிறது. இங்கு தயார் செய்யப்படும் கபசுரக்குடிநீரை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 750 பணியாளர்கள் கேன்கள் மூலம் நேரடியாக பொதுமக்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்று வழங்கி வருகின்றனர். இன்று முதல் 3 நாள்களுக்கு தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கப்பட உள்ளது.