அரசு திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க இணைப்பு பாலமாக செயல்படும் நீதிமன்றம்
பெரும்பாலான அரசு அலுவலர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக பணிபுரிந்து வருவதாக ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்தார்.
HIGHLIGHTS
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டையொட்டி, 45 நாள்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வந்தது. இதன் இறுதி நிகழ்வாக கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மெகா விழிப்புணர்வு முகாமில், பல்வேறு அரசுத் துறை சார்பில் மக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் மற்றும் சட்டப்பணி ஆணைக்குழு செயலாளர் மோகன்ராம் உள்ளிட்டோர் கண்காட்சியை பார்வையிட்டனர். பின்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் பேசுகையில், பொதுமக்கள் அரசு துறையில் பல்வேறு பணிகளுக்காக முறைப்படி மனு செய்கின்றனர். ஆனால், அரசு உதவிகள், திட்டங்கள் மறுக்கப்படுவதால் அவர்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனர். எனவே நீதிமன்றம் என்பது அரசுத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் இணைப்பாக உள்ளது என பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அரசுத் துறையில் பல்வேறு பணிகள் நடைபெறாத காரணத்தினால் நீதிமன்றத்தை நாடுகின்றனர். எனவே கரூர் மாவட்டத்தை பொருத்தவரை தமிழக அரசைப் பொருத்தவரை பல்வேறு அரசுத் திட்டங்கள் மக்களின் வீடுகளுக்கே செல்லும் வகையில் தற்போது அதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான அரசு ஊழியர்கள் மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகின்றனர் என பேசினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.