குமரி பார்த்தசாரதி கோவில் உற்சவம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
குமரியில் பாரம்பரியமும் பழைமையும் கொண்ட பார்த்தசாரதி கோவில் உற்சவத்த்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பார்த்திவபுரம் பகுதியில் அமைந்துள்ள பழமையான வரலாற்று சிறப்பு மிக்கதும் ஆசியாவிலேயே உண்டியல் இல்லா கோவில் என்ற பெருமை பெற்ற கோவிலுமான பார்த்தசாரதி கோவில் உள்ளது.
தொல்லியல் துறையின் கீழ் இயங்கி வரும் இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவோண மாதம் வெகு விமரிசையாக விழா கொண்டாடப்படுவது வழக்கம். 11 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலை மாலை வேளைகளில் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு 10 ம் நாளான திருவோணப்பண்டிகை தினத்தன்று கோவில் மூலவர் யானை மீது அமர்ந்து ஊர் பவனி வருவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சுவாமி ஊர் பவனி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று கோவில் மூலவரான கிருஷ்ணர் பவனி நடைபெற்றது. கொரோனா கட்டுபாடுகள் காரணமாக சுவாமி ஊரில் பவனி வருவதற்கு பதிலாக கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் படை சூழ கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.
கிருஷ்ணர் விக்ரகத்தை கோவில் பூஜாரி தலை மீது சுமந்து பவனி வர அதனை தொடர்ந்து கோவிலின் முகப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்கிற்கு நெய்தீபம் ஏற்றி கிருஷ்ணருக்கு பால், பன்னீர், நெய் உள்ளிட்ட நறுமண பொருள்களுடன் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
இதில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.