நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: குமரியில் களைகட்டிய வெற்றி கொண்டாட்டம்
உள்ளாட்சி தேர்தல் குமரியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் களைகட்டியது வெற்றி கொண்டாட்டம்.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் பேரூராட்சிக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் பேரூராட்சி வேட்பாளர்களின் வெற்றியை கொண்டாடும் விதமாக கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் வாக்கு எண்ணும் மைய முன்பாக கூடியதோடு மேளதாளம் முழங்க வெற்றி வேட்பாளருக்கு மாலை அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை வரவேற்கும் விதமாக பட்டாசுகளை வெடித்தும் ஊர்வலமாக சென்றும் தங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி கூறி சென்றனர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு நடைபெறாமல் இருப்பதற்காக ஏராளமான போலீசார் வாக்கு எண்ணும் மையம் முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து ஏராளமான கட்சி தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.