போலி செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை: சோதனையில் சிக்கிய வட இந்தியர்கள்
குமரியில் பிரபல கம்பெனி பெயரில் போலி செல்போன் உதிரி பாகங்கள் விற்பனையை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் வட இந்தியர்கள் சிக்கினர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் வேப்பமூடு சந்திப்பு அருகே அமைந்துள்ள வட இந்தியர்கள் நடத்தும் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை நடைபெறும் கடையில் ஏ.டி.எஸ்.பி., நவீன் குமார் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பிரபல செல்போன் உதிரிப்பாகம் தயாரிக்கும் நிறுவனமான இ.ஆர்.டி நிறுவனத்தின் உதிரிபாகங்கள் என முத்திரையிடப்பட்ட போலி செல்போன் உதிரிபாகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கு போலி உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்படுவதாக அந்நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி ஜிகல் கிசோர் அகுஜா ஏற்கனவே கோட்டார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போலி உதிரிபாகங்கள் கடையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கடையின் உரிமையாளரான மோகன் சிங் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவிற்கும் நாகர்கோயில் வட்டார பகுதிகளில் வட இந்தியர்கள் நடத்தும் கடைகளிலிருந்து செல்போன் உதிரிபாகங்கள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது போலி உதிரி பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சோதனை நடைபெறுவதை அறிந்து பல்வேறு கடைகளை மூடிவிட்டு அதன் ஊழியர்கள் தப்பி ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.