விதியை மீறி அதிக பாரம் ஏற்றிய 45 வாகனங்கள் மீது வழக்கு பதிவு: ரூ.1,17,530 அபராதம்
குமரியில் அதிக பாரம் ஏற்றி கொண்டு அதி வேகம் காட்டிய 45 வாகனங்கள் மீது வழக்கு. 1 லட்சத்து 17 ஆயிரத்து 530 ரூபாய் அபராதம் வசூல்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அளவுக்கு அதிகமான பாரங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் அதிவேகமாக வருவதால் விபத்துகள் அதிகரித்து வருவது வாடிக்கையாக அமைந்துள்ளது.
இது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து போலீசார் இன்று மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனையில் ஒரே நாளில் 45 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 1 லட்சத்து 17 ஆயிரத்து 530 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஒருநாள் சோதனையில் 45 வாகனங்கள் சிக்கி இருக்கும் நிலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் இது போன்ற சோதனைகளை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.