பரந்தூர் போராட்ட குழுவினருடன் பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ.சந்திப்பு
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினருடன் பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ.சந்தித்து பேசினார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களிலுள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகளை என சுமார் 4700 ஏக்கர் பரப்பளவை கையகப்படுத்தி இரண்டாம் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்து உள்ளன.
இதற்குஎதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் 73 வது நாளாக போராட்டத்தில் குழந்தைகளுடன் நாள்தோறும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நாள்தோறும் அப்பகுதிக்கு வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அவ்வகையில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தி ஏகனாபுரம் வரும் வழியில் கண்ணந்தாங்கல் கிராமம் அருகே காவல்துறையின் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டு எட்டு பேர் மட்டுமே இரு கார்களின் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு அப்பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் ஆய்வு மேற்கொண்டு காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.
ஏகனாபுரம் கிராமத்தில் 73 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொது மக்களிடம் அவர்களது குறைகளை ஜெகன் மூர்த்தி கேட்டறிந்தார். அதன் பின் பொதுமக்களிடம் பேசுகையில்விமான நிலையம் அமைப்பதற்காக குடியிருப்பு , நீர்நிலைகளை அழித்து உருவாக்குவது வருத்தம் அளிப்பதாகவும், இதை தவிர்க்க வரும் சட்டமன்ற கூட்ட தொடரில் பேச உள்ளதாகவும் , இக்கிராம குழுவினுடன் விரைவில் முதல்வரை சந்தித்து இவர்களின் கோரிக்கையை எடுத்து வைப்பேன் என தெரிவித்தார்.
கிராம மக்களின் குறைகளை கேட்டபோது , அதில் பேசிய பெண்மணி , விமான நிலையம் எங்கள் பகுதியில் வேண்டாம் என்று தான் கடந்த 73 நாட்களாக போராடிவரும் நிலையில் எந்த ஒரு அரசு அதிகாரிகளோ அமைச்சர்களோ எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.
நாங்கள் படிப்பறிவு இல்லாத ஏழை கிராம மக்கள் நாள்தோறும் கால்நடை வளர்ப்பு விவசாய வேலைகள் மூலம் வாழ்ந்து வரும் நிலையில் அருகில் உள்ள நகரங்களுக்கு கூட சென்றதில்லை எனவும், நீங்கள் அளிக்கும் பணத்தை சாப்பிட முடியுமா? விவசாயத்தில் வரும் நெல்களை கொண்டு சாப்பிட்டு வரும் நிலையில் கடந்த 73 நாளாக அனைவரும் உடலளவில் மனதளவிலும் இந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக கதறிய படி தெரிவித்தனர்.
முதியவர் ஒருவர் கூட்டத்தில் கூறுகையில் , எங்களது மூதாதையர் அதற்கு முன்னர் என பலர் உருவாக்கிய நீர் நிலைகள் குடியிருப்பு பகுதிகளை தற்போது புதிய இடத்தில் அரசு உருவாக்குமா ? எனவே இதை கைவிட அனைவரும் ஒருங்கிணைப்போம் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் புதிய பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.பி.சி. தனசேகரன் உள்ளிட்ட புரட்சி பாரத கட்சி மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.