கம்பன் கழகம் நடத்திய உலக தமிழ் வளர்ச்சி மாநாடு நிறைவு விழா
கம்பன் கழகம் மற்றும் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக கடந்த இரு தினங்களாக உலக தமிழ் வளர்ச்சி மாநாடு நடைபெற்றது
HIGHLIGHTS
சாதி,மத வேறுபாடுகளை ஒழித்ததில் பெரும் பங்கு பக்தி இலக்கியங்களாகத்தான் இருக்கிறது என புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு நிறைவு நாளில் உரையாற்றினார்.
காஞ்சிபுரம் மற்றும் திண்டிவனம் கம்பன் கழக அறக்கட்டளை, காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி ஆகியன இணைந்து அக்கல்லூரியின் கலையரங்கில் உலகத்தமிழ் வளர்ச்சி மாநாட்டினை நடத்தினார்கள்.
சனிக்கிழமை காலையில் தொடங்கிய மாநாட்டின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. விழாவில் தமிழ்ச் சான்றோர்களுக்கு விருதுகள், பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தியவர்களுக்கும் நினைவுப் பரிசுகளும்,சான்றிதழ்களையும் புதுவை அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கி விழா பேருரை ஆற்றினார்.
பக்தி மூலமாகத்தான் தமிழும், தமிழ் மூலமாகத்தான் பக்தியும் வளர்ந்திருக்கிறது என்பதற்கும் பல உதாரணங்களை சொல்ல முடியும். பக்தியில் வாழ்வியலையும் சொல்லியிருக்கிறார்கள். இயல்,இசை, நாடகம், பக்தி ஆகியனவும் தமிழ் மொழியால் வளர்ந்திருக்கிறது.
பக்தி இலக்கியங்கள் கிறிஸ்தவம், இஸ்லாமியம், சமணம், பௌத்தம் ஆகியனவற்றையும் வளர்த்திருக்கிறது. அனைத்து மதங்களையும் சமமாகவே பாவித்தும் இருக்கிறது தமிழ்.எத்தனையோ பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் தமிழ் மொழியில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
பல சுவையான புதையல்கள் தமிழ் மொழிக்குள் இருக்கிறது என்பதால் தான் இன்றும் மாநாடுகள், கருத்தரங்குகள், ஆன்மீக சொற்பொழிவுகள் ஆகியன நடந்து வருகின்றன. உலக அளவில் 800 கோடி மக்கள் இருந்தாலும்,அவர்கள் பல ஆயிரக்கணக்கான மொழிகளில் பேசினாலும் தமிழ் மொழி தான் முதன்மையானது என மொழியியல் ஆய்வாளர்கள் தெரிவிப்பதாகவும் அமைச்சர் பேசினார்.
விழாவிற்கு மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் , தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பரப்பியல் அகர முதலி திட்ட இயக்குநர் கோ.விஜயராகவன், காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன், மயிலம் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு,தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் ரா.குறிஞ்சி வேந்தன் , கம்பன் கழக அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் க.ஞானஜோதி சரவணன் , சூரியனார் கோயில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
விழா ஏற்பாடுகளை சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்