இறுதி கட்டத்தை எட்டிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விழாப் பணிகள்
நாளை நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பத்தாயிரம் பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் .தொகை வழங்குகிறார்
HIGHLIGHTS
கலைஞர் மகளிர் உரிமை திட்ட துவக்க விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் உரிமை திட்டம் என்பது பெயர் மாற்றப்பட்டு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
அண்ணா பிறந்த நாளில் இத்திட்டம் துவங்கப்படுவதால் காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா இல்லத்தில் உள்ள திரு உருவ சிலை மற்றும் மாநகராட்சியில் உள்ள அண்ணா சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் விழாவில் பயனாளிகளுக்கு முதல்வர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குகிறார்.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த 15 தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நகர் முழுவதும் முதல்வரை வரவேற்கும் பேனர்கள் மற்றும் விழா பந்தல் அருகே வாழைமரை தோரணம் மற்றும் பிரம்மாண்ட அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது மட்டும் இல்லாது தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவங்கள் மணல் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் மகளிர் சுய உதவி குழுக்களின் கண்காட்சியும் விழா அரங்கம் அருகே அமைக்கப்பட்டு வருகிறது. ஒலி ஒளி அமைப்பு மற்றும் இருக்கை அமைப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இன்று மாலைக்குள் பணிகள் அனைத்தும் நிறைவு பெறும் வகையில் பணிகளை எம்எல்ஏக்கள் சுந்தர் மற்றும் எழிலரசன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரித படுத்தியுள்ளனர்.