‘இருளர் வாழ்வில் வெளிச்சம் வருமா?’ 8 ஆண்டுகளாக இருட்டில் வாழும் இருளர் மக்கள்.
காஞ்சிபுரம் அடுத்த கூரம் ஊராட்சியில், கடந்த 2015 இலவச வீட்டு மனை பட்டா 36 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாததால், இருளில் வாழ்கின்றனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவது வழக்கம். இதில் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் , மின்சாரம் மற்றும் வருவாய்த்துறை காவல்துறை சம்பந்தப்பட்ட புகார்களை மாவட்ட ஆட்சியரிடம் அளிப்பர். இதனை மாவட்ட ஆட்சியர் உரிய துறைக்கு விசாரணைக்கு பரிந்துரைத்து அதன் பேரில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவார்.
அவ்வகையில், கடந்த ஓராண்டுக்கு மேலாகவே பொதுமக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளிப்பது வழக்கம். குறிப்பாக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் அதிக அளவில் இலவச வீட்டு மனை பட்டா கோரி மனு அளிப்பர், இதில் குறிப்பாக பழங்குடியின மக்களுக்காக தற்போது ஐந்து தாலுகாக்களிலும் புதிய குடியிருப்புகள் பல கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஏற்கனவே பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற தயக்கம் காட்டி வருகின்றனர். காஞ்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட கூரம் ஊராட்சியின் கீழ் வரும் சிற்றுரான மணல்மேடு பகுதியில் கடந்த 2015 - 16 இல் 36 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் எஸ்சி எஸ்டிக்கான திட்டத்தின் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
கூறம் மணல்மேடு கிராமத்தில் வாழ்ந்து வரும் இருளர் குடும்பங்கள் மின் இணைப்பு கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
ஆனால், எந்த வீடுகளும் சரியான முறையில் முழுமை பெறவில்லை என்பதும் தற்போது வரை மின் இணைப்பு இல்லாமல் பல இன்னல்களை அப்பகுதியில் வாழ்ந்து வரும் இருளர் இன மக்கள் சந்தித்து வருவதாகவும், இந்த தலைமுறையினர் பள்ளியில் படிக்கும் நிலையில், வீட்டில் மின்சாரம் இல்லாததால், மாலை நேரங்களில் கல்வி கற்பதில் பெருத்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் தற்போது 20சதவீத குடும்ப அட்டைகள் பெறும் அளவிலேயே வழங்கப்படுகிறது. அதாவது ஒரு குடும்ப அட்டைக்கு அரை லிட்டர் மட்டுமே உரிய காலத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் உள்ளது.
இதைப் பெற தவறிவிட்டால் வெளி சந்தையில் மட்டுமே மண்ணெண்ணெய் பெற இயலும். இது கூடுதல் செலவாகும் என்பதும் குறைந்த வருமானத்தில் வாழ்ந்து வரும் இவர்கள் இதற்காக தங்களது வருமானத்தின் பெரும் பகுதியை செலவிடுவதாகவும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் தற்போது வரை இதற்கான விடியல் தீர்வு கிடைக்கவில்லை என்பதும், தற்போதைய காலத்தில் கூட மின்சாரம் இல்லாமல் தாங்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் அவல நிலையே நீடித்து வருகிறது எனவும் மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்தனர்.