காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள அல்லாபாத் ஏரி சீரமைக்கப்படுமா?
காஞ்சிபுரம் மாநகரில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள அல்லாபாத் ஏரியை சீரமைக்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் ஏரிகள் நிறைந்த மாவட்டம் என அழைக்கப்படுவது காஞ்சிபுரம் மாவட்டம் ஆகும். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேட்டில் இருந்து சின்ன காஞ்சிபுரம் சி.எஸ். செட்டித் தெருவிற்கு செல்லும் வழியில், அல்லாபாத் ஏரி உள்ளது. நூறு ஏக்கர் பரப்பில் உள்ள இந்த ஏரி நீரை பயன்படுத்தி பல ஆண்டுகளுக்கு முன் திருக்காலிமேடு, திருவீதிபள்ளம் உள்ளிட்ட பகுதியில் விவசாயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சுற்றியுள்ள திருக்காலிமேடு, நேதாஜி நகர், வரதராஜபுரம் தெரு, திருவள்ளுவர் தெரு. கே.எம்.வி., நகர், திருவீதிபள்ளம் உள்ளிட்ட பகுதிக்கு, நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இது விளங்கி வருகிறது.
இந்நிலையில், ஏரிக்கு மழை நீர் வரும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக தூர்ந்து மாயமாகியுள்ளது என்பது வருத்தமான ஒன்று. இது மாநகராட்சி எல்லையில் உள்ளதால் , பொதுப்பணித்துறை இதை பராமரிக்க இயலாது எனவும் , பொதுப்பணித்துறை இதை பரமாரிக்க வேண்டும் என இருதரப்பும் மாறி மாறி விளக்கம் அளித்து வருகின்றனர்.
முறையான பராமரிப்பு இல்லாததால் ஏரி முழுவதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல் மாறி உள்ளது. இதில் மான்கள் கூட உலாவுவதாக அப்பகுதி பொதுமக்கள் அவ்வப்போது பார்த்ததாக தெரிவிப்பது உண்டு.
பல முறை பெய்த பலத்த மழையில் கூட இந்த இந்த ஏரி முழுமையாக நிரம்பியதில்லை. 2015ல் வெள்ள நீர் கால்வாய் இல்லாததால் இப்பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது பாதிப்பு ஏற்பட்டது என்பது கூறிபிடதக்கது.
நீர்நிலைகளை காக்க வேண்டும், பேரிடர் காலங்களில் கடந்த 2015 போல் நகரில் நீர் புகாமல் மழை நீர் வெளியேறி நீர் நிலைகளை அடைய வேண்டும் என கூறி, செயல்பட்டு வரும் மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி உடன் இணைந்து இந்த நீர் வரத்து கால்வாய்களை மீண்டும் கண்டறிந்து ஆக்கிரமிப்பில் இருந்து நீட்டி உரிய வகையில் ஏரிக்கு நீர் செல்ல வழி வகுக்க வேண்டும்.
மேலும் அல்லாபாத் ஏரி நகரினையொட்டி உள்ளதால் ஏரியை முழுமையாக சீர் செய்து பொழுதுபோக்கு மையமாக மாற்றவும் அரசு மற்றும் மாநகராட்சி சிந்திக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் புனிதாசம்பத் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
அம்மனுவில், படகுகுழாம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைத்தால் இப்பகுதி பொதுமக்கள் அங்கு செல்லும் நிலையில் சிறிய கட்டணம் நிர்ணயித்தால் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஆலோசனையும் தெரிவித்து இருந்தார்.
மெல்ல மெல்ல அல்லாபாத் ஏரி பரப்பு குறைந்து குடியிருப்பு பகுதிகளாக மாறி வருவதும், இதை கண்டு கொள்ளாவிட்டால் ஏரியை காணவில்லை என்று கூறும் நிலை விரைவில் வருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.