காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி
சூனாம்பேடு பகுதியில் வசிக்கும் முதியவர் தனது நிலத்தை அளவீடு செய்ய விடாமல் மற்றொருவர் தடுத்து வருவதாகக்கூறி, தீக்குளிக்க முயன்றார்.
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, வயது 55. இவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் 20 சென்ட் நிலம் உள்ளது. இதன் அருகில் ஆசிரியர் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ள நிலையில் சுப்பிரமணி தனது நிலத்தை அளவீடு செய்து, தனது சகோதர சகோதரிகளுக்கு அளிக்கத் திட்டமிட்டு மனு செய்த நிலையில் அளவீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
மேலும் இவருக்கு அடிக்கடி தொல்லை கொடுப்பதாக சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் ஆசிரியர் மேல் எடுக்காததால், மன உளைச்சலுக்கு ஆளானார். இவருடைய ஆவணங்கள் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் ஆக இருந்தபோது மனு அளித்த குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளிக்க நின்று கொண்டிருந்தபோது திடீரென தனது கையில் கொண்டு வந்த மண்ணெண்ணையை ஊற்றி, தற்கொலைக்கு முயன்றார். அப்போது அருகில் இருந்தவர்கள் சுதாரித்து கொண்டு, அவரை காப்பாற்றி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவரை அழைத்துக்கொண்டு குளியலறை சென்று உடல் முழுதும் நீர் ஊற்றி அணைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தி, பின்னர் பத்திரமாக வீட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.