காஞ்சிபுரம் அருகே ஆசிரியர்கள் இல்லாமல் பாடம் பயிலும் பள்ளி மாணவர்கள்
Kanchipuram News in Tamil -காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.
HIGHLIGHTS
Kanchipuram News in Tamil -காஞ்சிபுரம் அருகே அரசு ஆதிதிராவிடர் ஆரம்ப பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாமல் துவக்க பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே போதிய ஆசிரியர்களை ஆதிதிராவிடர் நலத்துறை உடனடியாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இயங்கி வருகிறது அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி . இப்பள்ளியில் ஆரம்பத்தில் 160 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த நிலையில் தற்போது 102 மாணவர்கள் ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் அரசு விதிகளின்படி ஒரு தலைமை ஆசிரியர், நான்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால் தற்போது இப்பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் நிரந்தர பணியில் இல்லை. இங்கு பணியாற்றிய இரு ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்று பிற பள்ளிகளுக்கு சென்று விட்டனர்.
இவர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் யாரும் இதுவரை பணி ஏற்பு செய்யவில்லை. இதனால் ஏற்கனவே பதவி உயர்வு பெற்றவர்களை அவ்வப்போது அழைத்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வைக்கின்றனர். இதைவிட ஒரு படி மேலாக சென்று அனைத்து வகுப்பு மாணவர்களையும் ஒரே வகுப்பில் அமர வைத்து மாணவர்களே பாட புத்தகத்தில் உள்ளதை படித்து வருகின்றனர்.
மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி என்பது மிக முக்கியமானது. தற்போது உள்ள கல்வி முறையில் கற்பதை தவிர்த்து விட்டால் வரும் காலங்களில் இவர்கள் கல்வியில் பிரகாசிக்க இயலாது. மூன்று வகுப்பறை கட்டடங்கள் இருந்தும் ஆசிரியர்கள் இல்லாததால் இப்பள்ளியிலிருந்து பல மாணவர்கள் வெளியேறி விட்டனர். பொதுவாகவே ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லை என்பதும் குற்றச்சாட்டாகவே எழுந்து வருகிறது.
இது குறித்து கல்வி மேலாண்மை குழு உறுப்பினரும் மாநகராட்சி மன்ற உறுப்பினருமான கயல்விழி சூசையப்பர் கூறுகையில் , தனியார் பள்ளிகளின் கட்டணத்தை செலுத்த இயலாத காரணத்தினால் தான் தற்போது ஆரம்பப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. மேலும் பள்ளி கல்வித்துறை நடவடிக்கையும் கல்வி கற்பதில் ஆர்வமும் காரணமாகும் அரசு துவக்கப் பள்ளிகளில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஆதி திராவிட நலத்துறை கீழ் இயங்கும் இந்த பள்ளியில் ஆசிரியர்களே இல்லை .பதவி உயர்வு பெற்ற பின்னும் அவர்களைக் கொண்டு இன்னும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தற்போது வரை பணிக்கு வரவில்லை.
திடீரென பள்ளிக்கு வரும்போது அனைத்து வகுப்பு மாணவர்களையும் ஒரே வகுப்பில் அமர வைத்து இருந்த காட்சியும் , ஆசிரியர் இல்லாததும் அதிர்ச்சி அளித்தது. இதுகுறித்து புகார் தெரிவித்த நிலையில் இன்று மட்டும் ஆசிரியர்கள் வந்துள்ளனர் நாளை வருவார்களா என்பது தெரியவில்லை என தெரிவித்தார்.
காஞ்சிபுரம் அருகே ஆசிரியர்கள் இல்லாத மாணவர்கள் கல்வி கற்பது தடை ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை உடனடியாக இதற்கு கல்வித் துறையிடம் இணைந்து ஆசிரியர் நியமனம் செய்து பள்ளி மாணவர்கள் வளர் இளம் பருவத்தில் கல்வி கற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2