முடிதிருத்தும் அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்க கோரி மனு
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் முடிதிருத்தும் நிலையங்களை திறக்க சிறப்பு அனுமதி அளிக்க கோரி மனு அளித்தனர்
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த இன்று முதல் மேலும் சில கட்டுப்பாடுகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதன் கீழ் அரசு மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சி மையங்கள், முடிதிருத்தும் நிலையங்கள் மற்றும் அழகு சாதன நிலையம் உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டிருந்தது.
சென்ற ஆண்டில் முதல்கட்ட பரவலின் போது முடி திருத்தும் நிலையங்கள் ஆறுமாதமாக மூடப்பட்டு பெரிதும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தற்போது மெல்ல மீண்டு வந்தனர்.
தற்போது மீண்டும் இந்த இரண்டாவது அலையில் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இது குறித்து அவர்கள் கூறுகையில்,
தற்போதைய காலகட்டதிற்கு ஏற்ப முடி திருத்தும் நிலையங்களை மாற்றுவதற்கு வாங்கிய கடன்களை கூட இன்னும் திருப்பி செலுத்த இயலாத நிலையில் உள்ளோம். எங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை பலப்படுத்துவது எப்படி முடியும். கடந்த காலங்களில் நிவாரண உதவியாக அரசால் அறிவிக்கப்பட்ட ரூ2000 ரூபாய் சிலருக்கு மட்டுமே கிடைத்தது. இதனால் பல தொழிலாளர்கள் தொழில் முடக்கத்தால் கடைகளை மூடிவிட்டு தினக் கூலி வேலைக்கு கட்டுமானம், தொழிற்சாலைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
எனவே, அரசு அறிவித்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து முடி திருத்த நிலையங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரி காஞ்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காஞ்சி மாவட்ட முடி திருத்துவோர் தொழிலாளர் நல சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்ட மனு அளித்தனர்.