பட்டாகத்தியுடன் புகுந்து சூப்பர் மார்க்கெட்டை சேதப்படுத்திய 4 பேர் கைது
பெரிய காஞ்சிபுரம், சூப்பர் மார்கெட்டுக்குள் பட்டாகத்தியுடன் புகுந்து சேதப்படுத்திய 4 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
HIGHLIGHTS
கடந்த 17ம் தேதி சிவகாஞ்சி எல்லைக்குட்பட்ட ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள தெருவிலுள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பட்டாக்கத்தியுடன் உட்புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பொதுமக்களை அச்சுறுத்தி கடை பொருட்களை அடித்து நொறுக்கியும் , உரிமையாளரை கேட்டு ஊழியர்களை பயமுறுத்தி பெரும் ரகளையில் ஈடுபட்டு கடையை சூறையாடிவிட்டு தப்பி ஓடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு டிஎஸ்பி மற்றும் சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெமினி ( எ ) மணிகண்டன் , ஜெகன் மற்றும் வையாவூர் கிராமத்தை சேர்ந்த அருண் ( எ ) அட்டுபிரபு , தேனம்பாக்கத்தை சேர்ந்த பிரசாந்த் ஆகியோர்களை தனிப்படையினர் கைது செய்தனர்.
இவர்கள் மீது வீரலட்சுமி சூப்பர் மார்க்கெட்டில் அத்துமீறி புகுந்து சூப்பர் மார்க்கெட்டை சேதப்படுத்தியது , அதன் உரிமையாளரை மிரட்டியது உட்பட பல்வேறு வழக்குகள் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபபட்டது.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் பாராட்டியதுடன், பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்க நினைக்கும் எவராயினும் அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.