ஊராட்சிகளில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் ஓராண்டு சிறை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் மற்றும் ஊராட்சிகளில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்படுகிறது.
HIGHLIGHTS
அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகள் , பதாகைகள் மற்றும் விளம்பர தட்டிகள் ,அட்டைகள் அகற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட செய்தி குறிப்பில் ,
அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகள் , பதாகைகள் மற்றும் விளம்பர தட்டிகள் , அட்டைகள் அகற்றுவது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கடந்த 02.06.2023 அன்று தொடர்புடைய துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் விளம்பர பலகைகள் , பதாகைகள் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டிருப்பதை அகற்றுவது தொடர்பாக பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. கிராம ஊராட்சி பகுதிகளில் விளம்பர பதாகைகள் நிறுவ-தமிழ்நாடு ஊராட்சிகள் (விளம்பர பதாகைகள் நிறுவ உரிமம் வழங்குதல் மற்றும் அது தொடர்பான விளம்பர வரி விதித்தல்) விதி, 2009 ல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
மேற்படி விதிகளை பின்பற்றி கிராம ஊராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகள் / பதாகைகள் /தட்டிகள் நிறுவ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு முறையாக விண்ணப்பித்து அதற்கான அனுமதி பெற வேண்டும்.மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் ஊராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகள் , பதாகைகள் , தட்டிகள் நிறுவும் பட்சத்தில் அவை சட்டத்திற்கு புறம்பாக நிறுவியதாக கருதப்பட்டு மேற்படி விதி 9-ன் கீழ் சம்பந்தப்பட்ட ஊராட்சியால் உடனடியாக அகற்றப்படும்.
விதிகளுக்கு புறம்பாக அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகள் , பதாகைகள் , தட்டிகள் தொடர்பாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு எண்.33819/2018, 30233/2011 மற்றும் 7304/2006 ஆகிய ரிட் மனுக்களில் வழங்கிய தீர்ப்பாணைகளின் படி உள்ளாட்சி அமைப்புகள் காவல் துறை ஒத்துழைப்புடன் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
காவல் துறையினர் அனுமதி பெறாமல் விளம்பர பலகைகள் , பதாகைகள் , தட்டிகள் வைத்த நபர்கள் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். விளம்பர பலகைகள் , பதாகைகள் , தட்டிகள் அனுமதியின்றி வைக்கப்படுவதை தடை செய்தல், மீறி வைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் , நிறுவனங்கள் மீது The Tamil Nadu Open Places (Prevention of Disfigurement) Act 1959 பிரிவு 4-ன் கீழ் நடவடிக்கைகள் எடுத்தல்.
ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் திருமணம், காதணி விழா, பொது நிகழ்ச்சிகள் ஆகியவைகளுக்கு பதாகைகள் , தட்டிகள் அனுமதியின்றி நிறுவப்பட்டால் ஊராட்சி நிர்வாகம் காவல்துறை ஒத்துழைப்புடன் அகற்றப்பட வேண்டும்.ஊராட்சி பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களில் உரிய அனுமதி பெறாமல் நிறுவப்படும் விளம்பர பலகைகள் , பதாகைகள் , தட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு தொடர்புடைய நபர்கள்/நிறுவனங்கள் மீது காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
ஊராட்சி பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் , பதாகைகள் , தட்டிகள் நிறுவிய நபர்கள் , நிறுவனங்கள் மீது சட்டப்படி அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.