ஒமிக்ரான் தொற்று தடுப்பு: காஞ்சிபுரத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனை
காஞ்சிபுரம் நகரில் ஓமிக்கிரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து தரப்பு வியாபாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் நகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து அறிஞர் அண்ணா அரங்கில் வணிகர் சங்க நிர்வாகிகள், பட்டுக்கடை உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் ஆகியோருடன், ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாநகராட்சி ஆணையாளர் பி.நாராயணன் பேசியதாவது: ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடிய நோய்த் தொற்று. எனவே வணிகர்கள், பொதுமக்கள் கொரோனா தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் கை கழுவும் திரவம், முகக்கவசம், உடல் வெப்ப பரிசோதனைக் கருவி ஆகியனவற்றை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே ஒமிக்ரான் பரவலை தடுக்க முடியும் என்றார்.
கூட்டத்தில் பேசிய வணிகர்கள் டிசிபி ஊழியர்கள் கடைகளில் ஆய்வு செய்யாமலே அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும் என்றனர். கூட்டத்துக்கு சுகாதாரத்துறை துணை இயக்குநர் சித்ரசேனா, காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் இக்பால் வரவேற்றார். கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர்கள் பிரபாகரன், சீனிவாசன், லெட்சுமிபிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக சுகாதார ஆய்வாளர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.