காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு: கைவிட்ட மகன்கள் மீது தாய் கண்ணீர் மல்க புகார்..!
காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆணையிட்டும் தன்னை தனது மகன்கள் பராமரிக்க மறுப்பதாக தாய் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. இதில் செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 65 வயதான மூதாட்டி மலர்விழி கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார். அம்மனுவில், காஞ்சிபுரம் பட்டம் செம்பரம் பாக்கம் கிராமத்தில் எனது கணவனுடன் வாழ்ந்து வந்த நிலையில் கணவரின் இறப்புக்குப் பின் தனது குடும்ப சொத்துக்களை எனது இரு மகன்கள், ஒரு மகள் மற்றும் எனக்கும் சேர வேண்டியது என ஒரு வீட்டுமனை மற்றும் ஏழு ஏக்கர் நிலங்களை கூட்டாக எழுதி வைத்தனர்.
மேலும் தனது 25 சவரன் நகையை எனது மகன் வாங்கி வைத்துக்கொண்டு எனது தாய் வழி சொத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு எனக்கும் எனது மகளுக்கும் தராமல் அலைக்கழித்து வருகிறார். குறித்து கடந்த நவம்பர் மாதம் காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியரிடம் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மனு செய்தேன்.
அந்த மனு மீதான விசாரணைக்கு பின் வருவாய் கோட்டாட்சியர், எனது இரு மகன்களும் தலா ஐந்தாயிரம் ரூபாய் பராமரிப்புச் செலவுக்கு வங்கிக் கணக்கின் மூலம் பிரதி மாதம் 5ஆம் தேதி எனக்கு செலுத்த வேண்டும் எனவும் எனக்கு உரிய சொத்துக்களை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்
இந்நிலையில், இந்த உத்தரவுக்கு கீழ்ப்படியாத எனது மகன்கள் பராமரிப்பை செலவை தர முடியாது என தொடர்ந்து மறுத்து வருகின்றனர். எனவே, உடனடியாக மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மூதாட்டி மலர்விழி மனுவில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மூதாட்டி மலர்விழி கண்ணீர் மல்க கூறுகையில், எனக்கு கேன்சர் வியாதி உள்ளது. எனது மகள் என்னை பராமரித்து வருகிறார். நீண்ட காலமாக மகளுக்கு பாரமாக இருப்பதால், எனக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என கோரினார்.