அடையாறு ஆறு பகுதி வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் அன்பரசன் ஆய்வு
அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்பு பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டம், அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், அடையாறு ஆற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு, பணிகளை துரிதமாக மேற்கொண்டு முடிக்க பொதுபணித்துறைக்கு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்பு வரதராஜபுரம் மற்றும் சோமங்கலம் பகுதிகளில் வெளிவட்ட சாலையில் அமைக்கப்பட்டு வரும் கால்வாய் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட, பின் ரூ. 70 கோடி மதிப்பில் 1800 மீட்டர் வரை அமைக்கப்படவுள்ள கீழ்மட்ட கால்வாய் அமைக்கும் பணியை பார்வையிட்டு, பணிகளை விரைவில் முடித்திட அறிவுறுத்தினார்.
அதன்பின் மகாலட்சுமி நகர், வரதராஜபுரம் மற்றும் முல்லை நகர், ராயப்பா நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் அகலப்படுத்துப் பணியை பார்வையிட்டார்.
போரூர் ஏரியின் உபரி நீர் வெளியேற கட்டப்படும் கீழ்மட்ட கால்வாய் பணியினையும், போரூர் ஏரியில் புதிய மதகு அமைக்கும் பணியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
குன்றத்தூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு பணிகளை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டப் பின் கூறியதாவது:-
குன்றத்தூர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சுமார் 7000 முதல் 8000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதிகளில் பெரும் மழை காலங்களில் 4 அடி முதல் 5 அடி வரை தண்ணீர் தேங்கி மக்கள் வெகு சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்த பிரச்சினைதமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வந்து பார்வையிட்டு, மழை நீர் வடிவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இத்திட்டத்திற்க்கான பணிகள் ஒரு வருட காலத்திற்குள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 20சதவீத பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இனிவரும் காலங்களில் பெரும் மழை வந்தாலும், பொதுமக்களை எந்த விதத்திலும் பாதிக்காத அளவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மழை நீர் வடிவதற்கான திட்டங்கள் தீட்டி இத்திட்டத்திற்கான பணிகள் செய்து முடித்து தந்திருக்கிறார்கள்.
ஒரத்தூர் தடுப்பணை பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
இவ் ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், மாவட்ட வருவாய் துறை அலுவலர் சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, நீர்வளத் துறை செயற்பொறியாளர் செல்வக்குமார், நீர்வளத் துறை உதவி பொறியாளர் குஜராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.