குடிநீர் கட்டமைப்புப் பணிகளை விரைவுப்படுத்த மேயர் மகாலட்சுமி அறிவுறுத்தல்
காஞ்சிபுரம் வெங்கடாபுரம் மற்றும் செவிலிமேடு பாலாற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் கட்டமைப்பு பணிகளை இன்று மேயர் , துணை மேயர் ஆய்வு மேற்கொண்டனர்.
HIGHLIGHTS
பேரிடர் காலங்களில் குடிநீர் குழாய்கள் சேதம் அடைவதை தவிர்க்க பாலாற்று குடிநீர் வழங்க புதிய பணிகளை விரைவு படுத்தக் கோரி மாநகராட்சி பொறியாளர் குழுவிற்கு மேயர் மகாலட்சுமி யுவராஜ் அறிவுரை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளில் உள்ள நான்கு மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் பொதுமக்கள் குடியிருப்பு வசதிக்காக தேர்வு செய்கின்றனர்.
ஏற்கனவே பாலாறு, வேகவதி , திருபாற்கடல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெறப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு நாள்தோறும் பல லட்சம் லிட்டர் வழங்கப்படுகிறது.
குறிப்பாக பாலாற்று ஆற்றுப் படுகையில் செவிலிமேடு, வெங்கடாபுரம், ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் போர்வெல் அமைக்கப்பட்டு நீர் ஊந்துதல் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பேரிடர் காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் குடிநீர் குழாய்கள் அனைத்தும் சேதமடைந்து குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருவதாக தொடர் புகார் வந்ததால் காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் இது குறித்து கருத்து கேட்கப்பட்டு , பேரிடர் காலங்களிலும் சேதமடைவதை தவிர்க்கும் வகையில் புதிய முறையில் பைல் பவுண்டேஷன் அமைத்து குடிநீர் குழாய்களை இணைக்க பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் உருவாக்கப்பட்டு பணிகள் இரு மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.
அவ்வகையில் பணிகள் நடைபெற்ற வரும் பகுதிகளான வெங்கடாபுரம், செவிலிமேடு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள போர்வெல் பகுதியினையும் , அங்கிருந்து நீரேற்றும் அறைக்கு நடைபெற்று வரும் பணிகளை மேயர் மகாலட்சுமி யுவராஜ் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார்.உடன் துணை மேயர் குமரகுருநாதன் கலந்து கொண்டார்.
இந்த ஆய்வில் ஆணையர் கண்ணன் மற்றும் பொறியாளர் குழுவினர் குடிநீர் பணிகள் நடைபெறும் விதம் குறித்த விளக்கங்கள் அளித்தனர்.
மேலும் பணிகளை தரமாகவும், விரைவாக கோடைகாலத்திற்குள் முடிக்க பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரருக்கு மேயர் மகாலட்சுமி யுவராஜ் அறிவுரை வழங்கினர்.
இந்த ஆய்வின்போது துணை மேயர் குமரகுருநாதன், மண்டல குழு தலைவர்கள் சாந்திசீனிவாசன், செவிலிமேடுமோகன், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், கார்த்திக் மற்றும் பொறியாளர் குழுவினர் குடிநீர் வழங்கல் பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.